சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்

 

கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழில் இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் சிறந்த இலக்கியங்கள் தோன்றி வெளிவந்து, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே மற்ற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் பிறந்தன.

உலகின் தொன்மையான மொழிகளில் கிரேக்கம், சீனம், தமிழ் ஆகிய மூன்று மொழிகள்தான் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளன. இவற்றுள் காலத்திற்கேற்ற மாற்றங்களைத் தழுவிக் கொண்டு பேச்சு, எழுத்து என்னும் இரு வழக்கிலும் இன்று மிகச் சிறந்து விளங்கும் ஒரு மொழியாகத் தமிழ் மொழி விளங்கி வருகின்றது. . .

தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியத்துக்கு முந்தியதாகத் தமிழில் கிடைத்த நூல் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் மட்டுமே. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் பல புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்கள் பழந் தமிழகத்தின் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கின்றன.

பண்டைத்தமிழ் அறிஞர்கள் இலக்கியங்கள் அகம் புறம் என இரு வகையாகப் பிரித்தனர். அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் பிறவற்றையும் குறிக்கும் என்ற அடிப்படையில் இலக்கியங்கள் பாகுபாடு செய்யப்பட்டன. சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குவது காதலும் வீரமுமே ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு ஒழுங்குமுறையாகத் தொகுக்கப்பட்டு எட்டுத்தொகை,  பத்துப்பாட்டு என இரு பிரிவாக அமைந்துள்ளன.  எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் பத்துப்பாட்டில் பத்து நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத் தொகை நூல்கள்

1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு

4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்

6. கலித்தொகை

7. அகநானூறு

8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்கள்

1. திருமுருகாற்றுபடை

2. பொருநறாற்றுப்படை

3. சிறுபாணாற்றுப்படை

4. பெரும்பாணாற்றுப்படை

5 கூத்தாராற்றுப்படைமலைபடுகடாம்

6. மரக்காஞ்சி

7. முல்லைப்பாட்டு

8. குறிஞ்சிப்பாட்டு

9. நெடுநல்வாடை

10. பட்டினப்பாலை

சங்க இலக்கியங்கள்

 

கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்

கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்

கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்

கடல்ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ

கடல்ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்

கடல்ஞாலத்து என் மகள் கற்கின்றவே. 

 கடல்சூழ்ந்த இவ்வுலகைச் செய்தவனும் நானே என்று சொல்கிறாள். இவ்வுலகமும் தானே என்கிறாள். இவ்வுலகத்தைத் தாவி அளந்து கொண்டவனும் (வாமன அவதாரம்), அகழ்ந்து எடுத்தவனும் (வராக அவதாரம்), உண்டவனும் தானே என்கிறாள். கடல்சூழ்ந்த உலகத்தின் ஈசன் இவள்மேல் வந்து ஏறி விட்டானோ? உலகத்தார்களே, கடல்சூழ்ந்த உலகத்தில் இருந்து கொண்டு என் மகள் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பற்றி நான் என்ன சொல்வேன்?

தலைவனின் இயல்புகளைத் தனதாகவே கொண்டு தலைவி பித்து நிலையில் அரற்ற, அவளது நிலைகண்டு தாய் கூறும் பாடலாக இது அமைந்துள்ளது.இதே போன்று வரும் வேறு அகத்துறைப் பாடல்கள் சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட நூல்களில் உள்ளன.

ஆனால் இன்னொரு தளத்தில் பார்த்தால், கவிஞனின் தனி மனம் பிரபஞ்ச மனத்துடன் ஒன்றுபடும் தருணத்தில் உதிக்கும் கவிதை இது என்று புலப்படும். “கடல்ஞாலம்” என்றும் “யானே” என்றும் மீண்டும் மீண்டும் வரும் சொற்கள் ஒரு தியான மந்திரம் போலவே இக்கவிதையில் உள்ளன.

சரணாகதி சாஸ்திரம்

அதர்மத்தின் வழி நடந்த பெரும் பேரரசான ராவண ராஜ்ஜியத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய கர்ம வீரன் ராமன்! ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் அவனை அண்டி தன்னை காப்பாற்றுமாறு கேட்க அண்டியவர்களை ரட்சித்த ஏக வீரன் ஸ்ரீராமன்! அதனாலேயே ராமாயணத்தை சரணாகதி சாஸ்திரம் என்று பெரியோர் கூறுவர்.

அனாயேனம் ஹரிஸ்ரேஷ்ட தத்தம் அஸ்யா அபயம் மம: விபீஷனோவா சுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் || –

வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம்

என்னை அண்டி விபீஷணன் என்ன அந்த ராவணனே வந்து சரணாகதி செய்தாலும், அவனையும் காப்பேன் என்று ராமன் விபீஷன சரணாகதியின் போது, அதை மறுதலித்து பேசும் சுக்ரீவனிடம் சொல்கிறான். மகா பாதகத்தை செய்த ராவணனையே மன்னிக்கக் கூடிய கருணை கடல் ராமன்.

அபகார நிந்தைபட் டுழலாதே

 

அபகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக்  குறியாதே

உபதேச மந்திரப்  பொருளாலே உனைநானி னைந்தருட்  பெறுவேனோ

இபமாமு கன்தனக்  கிளையோனே இமவான்ம டந்தையுத்  தமிபாலா

ஜெபமாலை தந்தசற்  குருநாதா திருவாவி னன்குடிப்  பெருமாளே

.

பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய  குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய  மணவாளா

காது மொருவிழி காக முறஅருள் மாய னரிதிரு  மருகோனே

கால னெனையணு காம லுனதிரு காலில் வழிபட அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல காளும் வகையுறு  சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள் சூழ வரவரு  மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு வாமி மலைதனி  லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட வேலை விடவல  பெருமாளே.

.

பத்தியால் யானுனைப்  பலகாலும் பற்றியே மாதிருப்  புகழ்பாடி

முத்தனா மாறெனைப்  பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்  கருள்வாயே

உத்தமா தானசற்  குணர்நேயா ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா

வித்தகா ஞானசத்  திநிபாதா வெற்றிவே லாயுதப் பெருமாளே

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
உன்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி யிருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற் கங்கை செஞ்சடை
மேல் வைத்த தீவண்ணனே.     

குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன்
மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற்
பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறு படுசூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

தன்னம்பிக்கை

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்….நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே! ஓ மனமே!! நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்

வாழ்த்து கவிதை வாசிப்போம் வானம் அளவை யோசிப்போம்
முயற்சியென்ற ஒன்றை மட்டும் மூச்சுபோல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு

மனிதா! உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உருவாகும்
தோல்வியின்றி வரலாறா? துக்கம் இல்லை என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்

ஒளவையார்

ஒளவையார் கம்பனோடும் ஒட்டகக் கூத்தரோடும் சொற்போர் புரிந்தவர்.கவிச் சக்கரவர்த்தி கம்பனையே “அடா” என்று அழைப்பதுபோல,ஒளவையார் துணிச்சலோடு பாடினாரல்லவா!

“எட்டேகால் லட்சணமே, ஏமன்ஏ றுமபரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாய் அது ?

கருங்காலிக் கட்டைக்கு நாணாகோ டாலி
இருங்கதலித் தண்டுக்கு நாணும்:- பெருங்கானிற்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்தோற்ற(து)
ஈரிரவும் துஞ்சாதென் கண்.”

கருங்கல்லைபோல மிக வைரமான மரமான கருங்காலி மரத்தையே வெட்டுகிற கோடாலி, கதலி வாழைத் தண்டை வெட்டும்போது (நறுகென்று இரண்டு துண்டாக) வெட்டமுடியாமல் வெட்கித்து நிற்பதுபோல, பெரும் வனத்திலே மாடு மேய்க்கிற சிறுவனிடம் தோற்றுவிட்டேனே!, இரு நாளுக்கு இனித் துக்கம் வரமாட்டாதே!

“மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்,
உண்ணீர் உண்ணீர் என்றுபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்,
கோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுதல் கோடி பெறும்,
கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்”.


நம்மை மதிக்காதவர் வீட்டு முற்றம் மிதியாமல் இருப்பதும், சாப்பிடுங்கள் என்று மனமுவந்து உபசரியாதவர்களிடம் சாப்பிடாமல் இருப்பதுவும் , கோடி கொடுத்தாலும் நல்ல பண்புடயவரோடு கூடி இருப்பதுவும், கோடி கோடியாகக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் இருப்பதுமாக நாலு கோடியாக்கி இப் பாடலைப் பாடியிருக்கிறார்

மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் – ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான் சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று.


இல்வாழ்க்கை என்பது, அழகிய பெரிய ஒரு வண்டி ஆகும். ஒத்த அன்புடைய மனைவியும் கணவனும் ஆகிய இருவருமே அந்த வாழ்க்கை வண்டியைக் கொண்டு செலுத்தக் கூடியவராவர். அவர்கள் அருமித்து செலுத்தினால்த்தான், வண்டி இனிது செல்லும். அந்த இருவருள் ஒருவரால் மட்டும் செலுத்தப்படுமானால், அது செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும்.

முத்தைத்தரு பத்தித் திருநகை

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய திருப்புகழ் இது. அருணகிரிநாதர் இப் பாடலில் சொல், பொருள், இசை நயத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். எனக்குப் பிடித்த திருப்புகழ் இது.

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.

பாடலின் கருத்து

வெண்முகத்தை நிகர்த்த, அழகான பல் வரிசையும் இளநகையும் அமைந்த, தேவயானை (தேவயானை கிரியா சக்தி என்பதால், கர்ம யோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.) தேவியின் தலைவனே, சத்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே!   மோட்ச வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞானகுருவே  என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு, வேதங்களுக்கு முதன்மையான ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து, இதிருவரும் (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) திருமால், பிரம்மா ஆகிய இருவரும்,  முபபத்து முக்கோடி தேவரும் அடி பணிய நின்றவனே,   இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தார மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்கிராயுத்தத்தால் இரவாக்கி,  நண்பனாகிய அருச்சுனனுக்கு தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்தி, பசுமையான நீலமேக வண்ணன் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ?,

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது).

 தித்தித்தெய என்ற தாளாத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த,  நாட்டிய பாதங்களை வைத்துக் காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்,  கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,  எட்டுத் திக்குகளிலும் உலகங்களாஇத் தாங்குகின்ற எட்டு பைரவர்கள் (அசிதாங்கன், காபாலி, சண்டன், உருகு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்)  இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப  ‘தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக’ என்ற தாள ஓசையைக் கூறவும். கூட்டமாக பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் ‘குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடி’ என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும,  சினேக எண்ணமில்லாத விரோத எண்ணங்கொண்ட அசுரர்களை, . கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரௌஞ்சகிரி தூளாக,  தர்ம மார்க்கத்திற்குப் பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே.

ஆய கலைகள் அறுபத்து நான்கு

ஆய கலைகள் அறுபத்து நான்கு

1. அக்கரவிலக்கணம் – எழுத்திலக்கணம்

2. இலிகிதம் – எழுத்தாற்றல்

3. கணிதம் – கணிதவியல்

4. வேதம் – மறை நூல்

5. புராணம் – தொன்மம்

6. வியாகரணம் – இலக்கணவியல்

7. நீதி சாஸ்திரம் – நய நூல்

8. ஜோதிடம் – கணியக் கலை

9. தர்ம சாஸ்திரம் – அறத்துப் பால்

10. யோக சாஸ்திரம் – ஓகக் கலை

11. மந்திர சாஸ்திரம் – மந்திரக் கலை

12. சகுன சாஸ்திரம் – நிமித்தகக் கலை

13. சிற்ப சாஸ்திரம் – கம்மியக் கலை

14.வைத்தியசாஸ்திரம் – மருத்துவக் கலை

15. உருவ சாஸ்திரம் – உறுப்பமைவு

16. இதிகாசம் – மறவனப்பு

17. காவியம் – வனப்பு

18. அலங்காரம் – அணி இயல்

19. மதுர பாடனம் – இனிதுமொழிதல்

20. நாடகம் – நாடகக் கலை

21. நிருத்தம் – ஆடற் கலை

22. சத்தப்பிரும்மம் – ஒலிநுட்ப அறிவு

23. வீணை – யாழ் இயல்

24. வேணு (புல்லாங்குழல்)- குழலிசை

25. மிருதங்கம் (மத்தளம்)

26. தாளம் – தாள இயல்

27. அத்திரப் பரிட்சை – வில்லாற்றல்

28. கனகப் பரிட்சை – (பொன் நோட்டம்)

29. இரதப் பரிட்சை – (தேர் ஏற்றம் )

30. கஜப் பரிட்சை – (யானை எற்றம்)

31. அசுவப் பரிட்சை – (குதிரை ஏற்றம்)

32. இரத்தினப் பரிட்சை – மணி நோட்டம்

33. பூமிப் பரிட்சை – மண்ணியல்

34. சங்கிராம விலக்கணம் – போர்ப் பயிற்சி

35. மல்யுத்தம் – கைகலப்பு

36. ஆகருடனம் (ஆகர்ஷணம்)- கவர்ச்சியியல்

37. உச்சாடனம் – ஓட்டுகை

38. வித்து வேடனம் – (நட்பு பிரிக்கை)

39. மதன சாஸ்திரம் – மதன கலை

40. மோகனம் – மயக்குக் கலை

41. வசீகரணம் – வசியக் கலை

42. இரசவாதம் – இதளியக் கலை

43. காந்தருவ வாதம் – (இன்னிசைப் பயிற்சி)

44. பைபீலவாதம் – (பிறவுயிர்மொழி)

45. கவுத்துவ வாதம் – மகிழுறுத்தம்

46. தாதுவாதம் – ( நாடி சாஸ்திரம்)

47. காருடம் – கலுழம்

48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)

49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)

50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்–வான் செல்கை)

51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)

52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது–வான்புகுதல்)

53. அதிரிசியம் – தன்னுறு கரத்தல்

54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)

55. மகேந்திர ஜாலம் – பெருமாயம்

56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்–அழற் கட்டு)

57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)

58. வாயுஸ்தம்பம் – வளிக் கட்டு

59. திட்டி ஸ்தம்பம் – கண் கட்டு

60. வாக்கு ஸ்தம்பம் – நாவுக் கட்டு

61. சுக்கில ஸ்தம்பம் – (விந்தையடக்கல்)

62. கன்னத்தம்பம் – புதையற் கட்டு

63. கட்கத்தம்பம் – வாட் கட்டு

64. அவத்தைப் பிரயோகம் சூனியம்

கொங்குதேர் வாழ்க்கை

 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

உரை

.

பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.